Thu. Apr 25th, 2024

ஒன்றிய நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் “ரிசர்வ் வங்கி அண்மையில் வணிக வங்கிகளுக்கு வழங்குகிற கடனுக்கான வட்டி விகிதத்தை ( REPO rate ) 0.40 % மற்றும் ரொக்க கையிருப்பு வரம்பு விகிதத்தை ( CRR ) 0.50 % உயர்த்தியுள்ளது . இம்முடிவு சாமானிய மக்களுக்கும் , சிறு வணிகர்களுக்கும் , குறு சிறு தொழில்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது .

இம்முடிவு மக்களின் வாழ்வை மிகக் கடுமையாக பாதிக்கும் . மக்கள் கைகளில் புழங்குகிற பணத்தை குறைத்து வாங்கும் சக்தியையும் காயப்படுத்தி விடும் . இம்முடிவு வீட்டு வசதிக் கடன் , வாகனக் கடன் , தனி நபர் கடங்களின் மாதத் தவணைகளை கணிசமாக உயர்த்தி சமூகத்தின் நடுத்தர , ஏழை பகுதியினரை கடுமையாக பாதிக்கவுள்ளது .

நமது தேசம் கடும் பண வீக்கத்தில் சிக்கித் தத்தளிக்கிறது . ஆண்டு பண வீக்கம் 17 மாதங்கள் இல்லாத 6.95 % அளவிற்கு உயர்ந்துள்ளது . மொத்த விலை பண வீக்கம் 14.5 சதவீதம் என்ற அளவைத் தொட்டுள்ளது . இவை மக்களின் மீது பெரும் சுமைகளை ஏற்றியுள்ளன . இது தவிர வேலை இழப்புகள் , வருமானம் மீதான தாக்குதல்கள் பேரவலம் ஆக மாறியுள்ளன . நவீன தாராளமயத்தின் சீரழிவை , கோவிட் பெருந்தொற்று இன்னும் ஆழப்படுத்தி உள்ளது . இதற்கான தீர்வுகள் வட்டி விகித மாற்றங்களில் இல்லை . மாறாக மாற்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

மொத்த விலைப் பண வீக்கத்தின் ஒரு அங்கமான எரிபொருள் , மின்சாரம் என்பவை மட்டும் 34.5 சதவீத பண வீக்கத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறது . இது அரசு வரி விதிப்பு கொள்கையின் விளைவே ஆகும் . இன்னொரு முக்கியமான ஒன்று உணவுப் பொருள் பண வீக்கம் . மார்ச் 2022 வரையிலான ஓராண்டு காலத்தில் கிராமப் புற உணவு விலைகள் இரண்டு மடங்குகள் உயர்ந்துள்ளன . இது தேசிய புள்ளி விவர அலுவலகம் தந்துள்ள அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு பற்றிய தகவல் ஆகும் . இந்த வட்டி விகிதக் குறைப்பு ரூ 87000 கோடி நீர்மத்தை சந்தையில் இருந்து உறிஞ்சி விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது . என்றாலும் இது பண வீக்கத்திற்கு தீர்வு காண உதவாது . மாறாக பொருளாதாரத்தில் பணச் சுருக்கத்தையே உருவாக்கும் . சாதாரண நடுத்தர மக்கள் கைகளில் புழங்குகிற கொஞ்ச நஞ்ச பணத்தையும் உறிஞ்சி விடும் .

சிறு தொழில் முனைவோர் , சிறு தொழில் அமைப்புகள் பல ரிசர்வ் வங்கியின் முடிவு குறித்த கவலைகளை தெரிவித்துள்ளனர் . அவர்களின் கவலைகளில் நியாயம் உள்ளது . இது கடனுக்கான வட்டியையும் , கச்சா பொருட்கள் விலையையும் கடுமையாக உயர்த்தி விடும் . ரிசர்வ் வங்கியின் முடிவுநுகர்வை பாதித்து கிராக்கியை குறைத்து விடும் . இன்னும் கோவிட் பாதிப்பில் இருந்தே நாட்டின் பொருளாதாரம் மீளாத நேரம் இது . ரிசர்வ் வங்கியின் * 2021 – 22 க்கான கரன்சி மற்றும் நிதி ” அறிக்கை கூறுவது என்ன ? கோவிட் பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு 12 ஆண்டுகள் எடுக்கும் என்கிறது . இந்த சூழலில் ரிப்போ விகிதம் , சி.ஆர்.ஆர் விகித உயர்வுகள் மேலும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி விடும் .

இந்த சூழலில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் , மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும் , குறு சிறு தொழில்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம் . குறு சிறு தொழில்களுக்கு சலுகை வட்டியில் கடன் அளித்திடுவதையும் , குறு சிறு தொழில்களுக்கான கடன் இலக்குகளை வங்கிகள் நிறைவு செய்வதையும் , ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான செலவினங்களை நகரம் கிராமம் இரண்டிலும் உயர்த்தவும் , மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்ட ஒதுக்கீடுகளை அதிகரிக்கவும் திட்டவட்டமான முடிவுகளை எடுக்குமாறும் வேண்டுகிறேன் . ‘ என அக்கடிதத்தில் வேண்டியுள்ளேன் .

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *