Fri. Apr 26th, 2024

சிபிஐ(எம்) மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை ” தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக , மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது . இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது . மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று , தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ ( எம் ) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது .

மின்சாரம் , மக்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக உள்ளது . அன்றாட வாழ்க்கைக்கும் , வேலைவாய்ப்பிற்கும் மின்சாரமே அடிப்படையாகும் . அனைவருக்கும் தடையற்ற மின்சாரத்தை , நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் கடமையை மாநில அரசுகளே ஏற்றுள்ளன . அதே சமயத்தில் ஒன்றிய அரசாங்கம் , தனியார் பெருமுதலாளிகளின் லாபத்தை மனதில் கொண்டு , மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது . தனது போக்கிற்கு மாநில அரசுகளையும் , மின்வாரியத்தையும் நிர்ப்பந்திக்கிறது . இதனால் ஏற்படும் சுமை அனைத்தும் சாமானிய மக்களின் தலையிலேயே விடிகிறது .

ஏற்கனவே , மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் , தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசாங்கம் கொடுத்து வருகிறது . அதன் காரணமாக நுகர்வோருக்கு கடுமையான கட்டணச் சுமை அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது மின் விநியோகத்திலும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் புகுத்தப்படுகின்றன .

மோடி அரசின் இந்த போக்கை முன் உணர்ந்துதான் மின்சார திருத்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது .

தமிழ்நாடு பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படும் ரூ .926 கோடியோ , ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் பாக்கி வைத்திருக்கும் ரூ . 5085 கோடிகள் என்பதோ ஒன்றிய அரசால் அனுமதிக்க முடியாத தொகை அல்ல . தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நடத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளிகள் ரூ .2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கி வைத்துள்ளார்கள் . அவர்கள் அந்த தொகையை செலுத்திட ஆண்டுக்கணக்கில் அவகாசம் கொடுக்கும் மோடி அரசுதான் 12 மாநிலங்களில் வாழும் 64 கோடி மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளுவோம் என்று மிரட்டுகிறது .

தனியார் பெருமுதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகளை வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . அந்த நிறுவனங்களின் பட்டியலைக் கூட வெளியிட அரசு தயங்குகிறது . இதனோடு ஒப்பிட்டால் மாநிலங்களின் பாக்கித் தொகை ஒன்றுமே இல்லை . ஆனாலும் கூட அதனை காரணமாக்கி , பட்டியல் வெளியிட்டு , தனது கொள்கைகளை அமலாக்க நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன ? . பெருமுதலாளிகளுக்கு வெண்ணையும் , சாமானிய மக்களுக்கு சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது .

சாமானிய மக்களின் மீதும் , சிறு குறுந் தொழில்களின் மீது மின்வெட்டை சுமத்தும் கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) மாநில செயற்குழு கண்டிக்கிறது . உடனடியாக தனது கொள்கையை திரும்பப் பெற்று அனைத்து மக்களுக்கும் தடையில்லாத மின்சாரத்தை நியாயமான கட்டணத்தில் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம் . “

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *