Sun. Apr 28th, 2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பேராசிரியர் பிறந்தநாள் செய்தி! “இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் நூற்றாண்டு விழா நிறைவு பெற்று, 101-ஆவது பிறந்தநாள் இன்று! இனமானமும், தன்மானமும், மொழி உணர்வும், இன உணர்வும் பிறந்த நாள் இன்று!

தமிழ்நாட்டின் அரசியலிலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் வரலாற்றிலும் எவராலும் அழிக்க முடியாத் தடத்தை விட்டுச் சென்றுள்ளார் பேராசிரியர். சுயமரியாதை இயக்க காலந்தொட்டு -இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்காலம் வரையில் தனது உரையால் வழிநடத்திக் கொண்டு இருந்த பேராசிரியப் பெருந்தகை அவர்கள் இப்போதும் உணர்வால்
வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல, விளக்காகவும் இருந்தவர் பேராசிரியர். அவர் காட்டிய இனமான ஒளியில் நமது பயணம் தொடர்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை மெய்ப்பிக்கும் தொண்டே தனது பணி என்று சொன்னவர் பேராசிரியர் அவர்கள்.

அத்தகைய இலக்கைக் கொண்டதாகவே திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர்களில் முதலிடம், மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்ற இலக்கைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அடைந்துள்ளது என்றால் இதுதான் பேராசிரியர் காணவிரும்பிய கனவுத் தமிழ்நாடு.

‘ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!’ என்று வேண்டுகோள் வைத்தார் பேராசிரியர் அவர்கள். இதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.”

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *