Fri. Apr 19th, 2024

தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில், ரூ.5000 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 10,000 ஊதியமாக பெற்று வருகின்றனர்.

வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம். ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான், அவர்கள், பகுதிநேர ஆசிரியர்களாக இப்பணியில் சேர்ந்தனர்.

ஆனால், பகுதிநேர ஆசிரியர்கள், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு அதிகபட்சமாகவே ரூ.5000 மட்டும் தான் ஊதியம் கிடைத்தது. அதுதவிர, பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றினாலும், தங்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக, ஊதிய உயர்வு வழங்கு வேண்டும். எதிர் வரும் தமிழர் திருநாளான, தைத்திருநாளையொட்டி பொங்கல் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.”

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *