தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர் பெ.ஜான்பாண்டியன் எம்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் மாதவன் (வயது 21), வீரமணி (44), அறிவழகன் (35), தாமரைச்செல்வன் (38), முத்துப்பாண்டி (45) உள்பட 24 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 5 விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு, 24 மீனவர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், அவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக நடந்துவருகிறது. இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
பின்னர், அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே இச்சம்பவம் ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்துகிறேன்.
அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விசை படகுகள் அனைத்தையும் தமிழக அரசு கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும்.
எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துபேசி இருநாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
.
Visits: 5