தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சுங்கச்சாவடிகளில் ஃபாஸ் டேக் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவர்களுக்கு மாற்றாக, உள்ளூர் ஊழியர்களுக்கு மாற்றாக வட இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
சுங்கச்சாவடி நிர்வாகம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.
ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றால், 3 மாதத்திற்கு முன்பாக, அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விதியை சுங்கச்சாவடி நிர்வாகம் அப்பட்டமாக மீறியுள்ளது. இதன் காரணமாக, அந்த ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் குறித்த விவாகாரத்தில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பி,சுங்கச்சாவடி நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி, நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். “
Visits: 11