Thu. Apr 25th, 2024

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது , தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது , வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது , பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கியமான கடமைகளாகும் .

இதற்கேற்ப , வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் 26-09-2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது . இந்தக் கூட்டத்தில் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , கடந்த ஆண்டு பெருமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும் , இந்த ஆண்டு அதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்றும் , வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதாகவும் , முக்கியக் கால்வாய்களில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்து , இந்த ஆண்டு மழை நீர் தேங்காது என்று ஓரளவு எதிர்பார்ப்பதாகவும் கூறி இருந்தார் . மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே ‘ ஓரளவு ‘ என்று சொல்வது இந்த ஆண்டும் மழை நீர் தேங்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது .

இந்தச் சூழ்நிலையில் , நேற்று முன் தினம் பெய்த ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது . இந்த மழைக்கும் , வழக்கம் போல் பாதிக்கப்படும் பகுதிகளான கோடம்பாக்கம் , வேளச்சேரி , தரமணி , கிண்டி , சோழிங்கநல்லூர் , துரைப்பாக்கம் , காரப்பாக்கம் , செம்மஞ்சேரி , திருவல்லிக்கேணி , திருவொற்றியூர் , ராயபுரம் , பிராட்வே , கொடுங்கையூர் , தியாகராய நகர் , வண்ணாரப்பேட்டை என பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன . இதன் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது .

இது மட்டுமல்லாமல் , மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் , மின் வாரியப் பணிகள் , குடிநீர் வடிகால் வாரியப் பணிகள் என பல்வேறு பணிகளுக்காக சென்னை முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன . இதுவும் மழைநீர் தேங்குவதற்கும் , போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு காரணமாகும் . இது தவிர , மழைக் காலங்களில் இந்தப் பள்ளங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் கீழே விழுந்துவிடுகின்ற நிலை ஏற்படுகிறபோது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய சூழ்நிலையும் உருவாகும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார் . ஆனால் , அதற்கான பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை . எனவே , இந்த ஆண்டும் பேருந்து நிலையங்கள் குளமாக காட்சி அளிப்பது என்பது தவிர்க்க முடியாதது . ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை என்றால் , வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து மழைப் பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர் .

இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையை அடுத்து , வெள்ளத் தடுப்புப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்று ஆய்வு செய்து , அக்டோபர் மாதத்திற்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது . இருப்பினும் , இந்த வெள்ளத் தடுப்புப் பணிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முடியுமா என்பது கேள்விக்குறிதான் . ஏனென்றால் , நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் அந்த அளவுக்கு இருக்கிறது .

எனவே , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி , வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் , பருவமழையின் போது , ஆங்காங்கே தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் . “

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *