Fri. Apr 19th, 2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ” இந்தி மொழி நாள் விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் , ‘ நமது கலாசாரம் , வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் ‘ என்றும் , ‘ நாட்டின் ஆட்சி நிர்வாகம் , ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும் ‘ என்றும் தெரிவித்துள்ளார் .

கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் ” வேற்றுமையில் ஒற்றுமை ‘ என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது .

இந்தி என்கிற மொழி உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமும் , அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர் .

அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும் .

அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளைக் காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம் .

அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் செம்மொழியாம் தமிழ் மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை .

இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா . அதனை ‘ ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் .

உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் , அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை , உங்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் உள்ளூர் மொழிகளை இந்திக்கு இணையாக , ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவியுங்கள் .

இந்தி தினத்திற்குப் பதில் இந்திய மொழிகள் நாள் ‘ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் .”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *