மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அறிக்கை ” நாடாளுமன்றத்தில் ஐ.ஐ.டிகளில் ஓராண்டு இலக்கோடு நடைபெற்று வரும் நிலுவைக் காலியிடங்களுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் பற்றி கேள்வி எழுப்பி இருந்தேன் .
- எனது கேள்விகள் *
ஓராண்டு இலக்கோடு அறிவிக்கப்பட்ட நிலுவைக் காலியிடங் களுக்கான ஆசிரியர் பணி நியமனங்களில் ஓ பி சி , எஸ்.சி , எஸ்.டி இடங்கள் நிரப்பப்படவில்லை என்ற செய்திகளை அரசு அறியுமா ? சென்னை ஐ.ஐ.டியில் அறிவிக்கப்பட்ட 49 காலியிடங்களில் 13 இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதை அரசு அறிந்துள்ளதா ? அரசு இட ஒதுக்கீடு அமலாக்கத்தை கண்காணிக்க ஏதாவது முறைமை வைத்துள்ளதா ? ஆசிரியர் நியமன இடஒதுக்கீடு சட்டம் 2019 ன் அமலாக்கத்தை உறுதி செய்ய குழுவை உருவாக்குமா ? இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி களுக்கு எவ்வளவு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன ? எவ்வளவு விண்ணப்பங்கள் வரப் பெற்றன ? நிரப்பப்படாத ஓ.பி.சி , எஸ்.சி , எஸ்.டி காலியிடங்கள் எவ்வளவு ? என்ற கேள்விகள் 5 பகுதிகளாக அதில் இடம் பெற்று இருந்தன .
- அமைச்சர் பதில் *
எனது கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார் .
” அ ” முதல் ” உ ” வரை ஐந்து கேள்விகளாக இருந்தாலும் பதில் மொத்தமாக ஐந்து கேள்விகளுக்கும் சேர்த்து தரப்பட்டுள்ளன . இப்படி பல கேள்விகளுக்கு ஒரு பதில் தருவது நாடாளுமன்ற நெறிகளுக்கு முரணானது என்பதை ஏற்கெனவே நான் சுட்டிக் காட்டியுள்ளேன் . ஆனால் இந்த முறையும் அந்த மீறல் நடந்துள்ளது . கேள்வி வாரியாக பதில் தந்தால் அரசின் நடவடிக்கைகளில் உள்ள தவறுகள் மீது கூர் கவனம் ஏற்பட்டு விடும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை .
பதில்களும் ஐ ஐ டி களின் மீறலை மறைப்பதாகவே உள்ளன .
ஐ ஐ டி கல்வி நிறுவனங்கள் 1961 சட்டப்படியும் , அதன் தொடர்பான மற்ற சட்டங்களின் படியும் இயங்குகிற தன்னாட்சி பெற்ற அமைப்பாகும் என்று பதில் துவங்குகிறது . 2019 ஆசிரியர் நியமன இட ஒதுக்கீடு சட்டம் மீறப்படுகிறது என்பதுதானே கேள்வி . இதில் தன்னாட்சிக்கு என்ன சம்பந்தம் உள்ளது . தன்னாட்சி என்றால் கேள்விக்கு அப்பாற்பட்டவை என்றா அர்த்தம் ?
- ஐ ஐ டி ஆசிரியர் நியமனம் பல கட்டங்களை கொண்டது ; ஆதலால் காலம் எடுக்கும் என்ற கருத்தை முன் வைக்கிறது அமைச்சரின் பதில் . இதெல்லாம் இலக்கிடப்பட்ட பணி நியமனத்தை ஓராண்டு காலக்கெடுவோடு செப் 2021 இல் அறிவிக்கும் போது தெரியாதா ? ஓராண்டு இன்னும் ஒரு மாதத்தில் முடியப் போகிற நேரத்தில்தானே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது . எந்தெந்த ஐ.ஐ டி கள் எவ்வளவு காலியிடங்களை அறிவித்தன ? எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளது ? நிரம்பவில்லை என்றால் என்னென்ன காரணங்கள் ? என்பதுதானே கேள்வி . அதற்கு பதில் இதுவா ?
- எதற்காக ” வேண்டுதல் ” * கல்வி அமைச்சகம் இலக்கிடப்பட்ட பணி நியமனங்களை நடத்துமாறு ” வேண்டியது ” ( ” Requested ” ) என்று உள்ளது . இந்த தொனியே சரியில்லை . சட்டப்படி இட ஒதுக்கீடை கடைப்பிடிப்பதில் ” வேண்டுவது ” எங்கே வருகிறது ? அரசியல் சாசனத்தை விட ” வர்ணாஸ்ரம தர்மம் ” மேலானது என்பதாலா ? அரசு ” ஆணையிடுகிறது ” எனச் சொல்ல வேண்டாமா ?
கல்வி அமைச்சகம் ஒரு கண்காணிப்பு செல் வைத்துள்ளது என்கிறீர்கள் ! அந்த செல் இதுவரை கண்காணித்ததில் ஏதேனும் மீறல்களை கண்டுபிடித்துள்ளதா ? இல்லை , எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்காவது வந்துள்ளதா ?
ஆசிரியர் நியமன விவரங்களை ஏ.ஐ.சி.டி.இ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு ஐ.ஐ.டி களை ” வேண்டிக் கொண்டுள்ளதாக ” பதிலில் கூறப்பட்டுள்ளது . நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த இணைய தளத்தில் என்ன பதிவேற்றம் இதுவரை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களையாவது தந்திருக்கலாமே ! அங்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு எதற்கு நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ? AICTE portal இணைய தளத்தில் தேடுதலுக்கான குறிப்புகள் கூட தரப்படவில்லை . அதில் தேடினாலும் எளிதாக கிட்டவில்லை . அதில் பதிவேற்றம் நடைபெறுகிறதா ? ரோஸ்டர் விவரங்களும் இடம் பெறுமா ? என்று கூட உறுதி செய்யாமல் பதிவேற்றம் செய்ய ” வேண்டியுள்ளோம் ” என்றுதான் பதிலில் உள்ளது .
என்ன பதில் இது ? இதுதான் சமூக நீதி குறித்து அரசுக்குள்ள அக்கறையின் லட்சணமா ? எத்தனை முறை கேள்வி எழுப்பினாலும் , கடிதம் எழுதினாலும் இப்படி வழுக்கலான பதில் !
ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு என்றாலே அரசுக்கு இவ்வளவு பதட்டம் தொற்றிக் கொள்வது ஏன் ? வேண்டுதல் பயன் தராது அமைச்சர் அவர்களே ! சட்ட மீறல் இருப்பின் நடவடிக்கை தேவை . “
Hits: 3