Fri. Mar 29th, 2024

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும் , திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார் . ஆனால் , நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன .

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் , இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் ( ஐசிசிஆர் ) அமைப்பில் 1970 முதல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இந்தியப் பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன . இதில் சமஸ்கிருதம் , இந்தி , தமிழ் , வரலாறு , பொருளாதாரம் , தத்துவம் , பெங்காலி நாட்டுப்புற நடனம் , உருது , புத்த மதம் , இந்தியக் கல்வி உள்பட 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன .

2014 – க்குப் பிறகு இருக்கைகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து , தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன . இதில் ஹிந்திக்கு 14 இருக்கைகளும் , சமஸ்கிருதத்திற்கு 5 இருக்கைகளும் , இந்தியக் கல்விக்கு 26 இருக்கைகளும் , பிற இருக்கைகளுக்கு 6 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன . ஐசிசிஆர் இணையதளத்தில் உள்ள இப்பட்டியலில் செம்மொழியான தமிழ் இடம்பெறவே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி !

மேற்குறிப்பிட்ட பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை என்ற நிலையில் அண்மையில் ஐசிசிஆர் சார்பில் வெளியிட்ட வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் பணியாற்ற விரும்பும் பேராசிரியர்களை விண்ணப்பிக்ககோரும் விளம்பரத்தில் தமிழ்மொழி இடம் பெற்றிருந்தது . அதிலும் , உலகின் தொன்மையான தமிழ் மொழிக்கு 2 இருக்கைகள் மட்டுமே இருப்பதும் , போலந்து நாட்டிலுள்ள இந்த இருக்கைகளுக்கு 2014 முதல் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததும் மத்திய அரசின் ஓரவஞ்சனையையே காட்டுகிறது . எனவே , ஐசிசிஆர் பட்டியலில் தமிழைச் சேர்ப்பதுடன் , மேலும் பல நாடுகளில் தமிழுக்கான இருக்கைகளை உருவாக்கவும் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது .

பொதுவாகவே , மத்திய அரசின் திட்டங்கள் , அறிவிப்பு வெளிவரும்போது அதில் தமிழும் , தமிழக மக்களும் புறக்கணிப்பதாக எழும் விமர்சனங்களில் உண்மை இல்லாமல் இல்லை .

தமிழகத்துக்கு வரும்போது மட்டும் மேடைகளில் தமிழ் மொழியையும் , திருக்குறள் , சங்க இலக்கியப் பாடல்களையும் மேற்கோள்காட்டிப் பேசுவதும் , நடைமுறையில் தமிழைப் புறக்கணிப்பதும் மத்திய அரசுக்கும் , பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது . இப்போது தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல.வளர்ச்சிப்பாதை . ஆனால் மத்திய அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்கும் காரியத்தை செய்வது வேதனையளிக்கிறது.

இந்தி , சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் , மேன்மையான தமிழ் மொழிக்கு மிகக் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .

ஏற்கெனவே , தேசிய கல்விக் கொள்கையை தமிழைத் தவிர பெரும்பாலான தேசிய மொழிகளில் வெளியிட்டது மத்திய அரசு . கடும் எதிர்ப்புகளுக்குப் பின் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது .

இதேபோல , அஞ்சல் துறையில் அஞ்சலக கணக்கர் தேர்வுக்கான மொழி பட்டியல் ஆங்கிலம் , இந்தி மட்டுமே இடம் பெற்றன . இது தொடர்பாக கண்டனம் எழுந்த பின்னர் , தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது . போட்டித் தேர்வுகளில் மாநில மொழி புறக்கணிக்கப்பட்டால் , கிராமப்புற இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் .

இப்படி பல்வேறு விஷயங்களில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பது மத்திய அரசுக்கு அழகல்ல ! எல்லா மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம் . மத்திய அரசும் , அமைச்சர்களும் இனியாவது இவ்விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு , தமிழ்ச் செம்மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன் , தமிழ் மொழி மேம்பாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது .”

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *