தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தமிழ்நாட்டில் ரயில்வே, பெட்ரோலியம், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட ஒன்றிய அரசு பணிகளில் ஏராளமான வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அஞ்சலகங்களில் பணியாற்றுவதற்காக எடுக்கப்பட்ட 946 பேரில், பெரும்பாலானவர்கள் வெளி மாநிலத்தவர்கள். திட்டமிட்ட முறையில், இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் இந்திய அரசால் தமிழ்நாட்டில் இவ்வாறு தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய போக்கு காரணமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை கிடைப்பதில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, தமிழ்நாடு வேலை தமிழருக்கே என தமிழ்நாடு அரசே சட்டமியற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இச்சூழலில், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பெரும்பாலோனோர் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இப்பட்டியலில், ஆந்திரா,குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது அவர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்வதோடு, அப்பணிக்கான தேர்வை மீண்டும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வர வேண்டும். அத்தேர்வில், தமிழ்நாட்டு இளைஞர்களே பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். “
Visits: 10