Thu. Apr 18th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவிஞர் வைரமுத்துக்கு வாழ்த்து செய்தி “எழுபதாவது பிறந்தநாள் விழாவையும் இலக்கிய வாழ்வின் பொன்விழாவையும் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு எனது நெஞ்சுக்கினிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

அகவை எழுபதில் அடியெடுத்து வைப்பதும் – அதில் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றியதுமான பெருவாழ்வு உங்களுடையது .

முதல் இருபது வயது வரை மட்டுமே தனிவாழ்க்கையாக அமைந்து , அடுத்து அடியெடுத்த ஆண்டு முதல் கலை , இலக்கிய , திரையுலக வாழ்க்கையாக அமைந்துள்ளது உங்களது வாழ்க்கை .

38 நூல்கள் – 7500 பாடல்கள் என்பது எண்ணிக்கையாகக் கருத முடியாது .

தமிழ் இலக்கிய வாசிப்பாளர்களது இல்லத்தின் அலமாரி தோறும் உங்கள் படைப்புகள் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது . திரையுலக ரசிகர்கள் உள்ளம் தோறும் குடிகொண்டிருப்பவை உங்கள் பாடல்கள் .

வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் விருதுக்குரிய புத்தகங்களாக இருப்பதும் – எழுதிப் புகழ்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் பரிசுக்குரியதாக இருப்பதும் உங்களது திறமைக்குச் சாட்சி .

ஏழு தேசிய விருதுகள் பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்பது சாதாரணமான உயரம் அல்ல . அதேபோல் தமிழ்நாடு அரசு விருதை 6 முறை பெற்றுள்ளீர்கள் .

உங்களது 17 நூல்களை வெளியிட்டுப் பேசி இருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் . எந்தப் படைப்பாளிக்கும் வாய்க்காத பெருமை இது !

கவிஞர்களுக்கு எல்லாம் பெரும் கவிஞரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே , ‘ கவிப்பேரரசு ‘ என்று வாழ்த்தினார் என்றால் அதைவிடப் பெரும்பாராட்டுத் தேவையில்லை .

வைரமுத்து என்ற பெயர்ச் சொல்லே மறைந்து , ‘ கவிப்பேரரசு ’ என்ற சிறப்புப் பெயரே சிறப்பான பெயராக அமையும் அளவுக்கு உங்கள் தமிழே உங்களை உயர்த்தி வைத்துவிட்டது .

கள்ளிக்காட்டு இதிகாசம் , கருவாச்சி காவியம் , தண்ணீர் தேசம் , மூன்றாம் உலகப்போர் , தமிழாற்றுப்படை – ஆகிய படைப்புகள் தமிழ் வாழும் காலமெல்லாம் வாழும் படைப்புகள் !

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘ வைகறை மேகங்கள் ’ மூலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகம் ஆனீர்கள் . மேகமாக கரைந்து விடாமல் வைகறையாகவே நிலைத்துவிட்டீர்கள் .

இவை அனைத்தையும் தாண்டி , திராவிட இயக்கம் , தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் என தாங்கள் வலம் வந்ததுதான் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி !

‘ திராவிட இயக்கம் தந்த தினவுகளோடும் கனவுகளோடும் எழுத வந்தவன் நான் ‘ என்றும் , ‘ என்னிடம் பாரதிதாசனும் , அண்ணாவும் , கலைஞரும் தந்த இலக்கியமிருந்தது ‘ என்றும் , ‘ திராவிட இயக்கம் தந்த பகுத்தறிவுப் பாசமும் சோசலிசக் காதலும் நெஞ்சில் நிலைத்து நின்றன ‘ என்றும் , ‘ வாய்ப்புகளின் சின்னச் சந்து பொந்துகளிலும் பகுத்தறிவு , சோசலிசம் , பாட்டாளி வர்க்கம் என்ற என் இதயக் கனவுகளை ஈடேற்றினேன் ‘ என்றும் துணிந்து சொல்லும் திராவிடக் குரலாகவும் நீங்கள் வலம் வந்திருக்கிறீர்கள் .

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்று இருந்திருந்தால் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார்கள் . இன்னும் நீங்கள் இலக்கிய உச்சத்தைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் . கவிப்பேரரசாற்றுப்படை தொடரட்டும் .

உங்கள் தமிழே உங்களைப் பல்லாண்டு வாழ்விக்கும் . அன்பு வாழ்த்துகள் .

மிகுந்த அன்புடன் , ( மு.க.ஸ்டாலின் ) “

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *