இந்தியன் வங்கி தலைவர் திரு சாந்தி லால் ஜெயின் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி இன்று எழுதியுள்ள கடிதம் .
“இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவர்களின் உடல் நலத் தகுதி பற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் பாலின பாரபட்சத்தோடு அமைந்திருப்பதுதான் காரணம் . அதன் வழி காட்டல் கூறுவது இதுதான் .
” பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில் , பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும் . அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார் . பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர் , பதிவு செய்யப்பட்ட மருத்துவர் இடம் இருந்து உடல் நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால் , அவர் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும் . “
இது அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை .
அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14 , 15 , 16 ஆகியவற்றுக்கு விரோதமானது . சட்டத்தின் முன் எல்லோரும் சமம் , எந்த குடிமக்களும் பாலினம் உள்ளிட்ட எந்த காரணங்களாலும் பாரபட்சத்திற்கு ஆளாகக் கூடாது , வேலை வாய்ப்பில் பணி நியமனங்களில் எல்லா குடி மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் . எந்த வேலை வாய்ப்புகளிலும் பாலின பாரபட்சம் உள்ளிட்ட வேறுபாடுகள் காண்பிக்கப்படக் கூடாது என்று அரசியல் சாசனத்தின் பிரிவுகள் மிகத் தெளிவாக கூறுகின்றன .
பொதுத் துறை வங்கிகள் அரசுக்கு உடமையானவை . ” முன் மாதிரி பணியமர்த்துபவர்கள் ” ( Model ) Employer ) ஆக இருக்க வேண்டும் .
ஆனால் இந்தியன் வங்கியின் அணுகுமுறை அதன் பிற்போக்கான மன நிலையை , பாலின் பாரபட்ச அணுகுமுறையை பிரதிபலிக்கிறது . இவ் வழி காட்டல்களின் நோக்கம் , பிரசவ விடுப்பு பயனை தவிர்ப்பது ஆகும் . வங்கியின் அணுகுமுறை , அவர்களின் ஊதிய இழப்பிற்கு இட்டுச் செல்வதோடு , பணி முதிர்ச்சி காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும் . 6 மாதம் முதல் 10 மாதம் வரையிலான ” பணி நியமன மறுப்பு பணி ஓய்வு பயன்களான பி . எப் , பென்சன் , பணிக் கொடை வரை பாதிப்புகளை உண்டாக்கும் .
இது போன்ற பிரச்சினை ஸ்டேட் வங்கியில் எழுந்து எனது தலையீட்டிற்கு பிறகு அந்த வழி காட்டல்கள் திரும்பப் பெறப்பட்டது . ஆனால் இப்போது இந்தியன் வங்கி அதே வகையிலான பாரபட்சத்தை இழைக்கிறது . இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியும் இதே போன்ற வழி காட்டல்களை விடுத்திருப்பதாக அறிய வருகிறேன் . இந்தியன் வங்கியின் அறிவுறுத்தல் ஆக இருந்திருக்க கூடும் .
தாங்கள் உடனடியாக தலையிட்டு இத்தகைய பாலின அநீதியை தடுத்து நிறுத்துமாறும் – இந்தியன் வங்கி , தமிழ்நாடு கிராம வங்கி இரண்டு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள வழி காட்டல்களை திரும்பப் பெறுமாறும் வலியுறுத்துகிறேன் . மேலும் இத்தகைய பாலின பாரபட்ச வழிகாட்டல்களை வெளியிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகிறேன் .
இக்கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்குமென்று நம்புகிறேன் .”
Hits: 3