சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில், பட்டியல் சாதி பெண்ணுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதை தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிந்து 5 மாதங்களுக்கு பிறகும், காவல்துறை எவரையும் கைது செய்யவில்லை.
தில்லை நடராஜர் கோயில் என்பது மக்களின் சொத்து ஆகும். ஆனால் தீட்சிதர்கள் தங்கள் தனிப்பட்ட சொத்தாக பாவித்து அடாவடியாக நடந்து வருகிறார்கள்.
சில நாட்கள் முன் கோயிலிற்கு சென்ற அரசு அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் சொல்லிய அமைச்சர், தானே கோயிலுக்கு நேரில் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
உடனே, ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான இந்து முன்னணி, அமைச்சர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டுள்ளது.
நாட்டின் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையை மறுத்தும், அடாவடியாக செயல்படும் தீட்சிதர்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று மிரட்டும் தைரியம் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாடு அரசு, இந்த மிரட்டலுக்கும், அடாவடிக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”
Visits: 2