Fri. Apr 19th, 2024

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும் , அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன . அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு , பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் , டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும் ” என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது . ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அனைத்துத் தரப்பு மக்களின் நலனை தி.மு.க. காற்றில் பறக்கவிட்டுவிட்டது . தி.மு.க. அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பையேற்றபோது , சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது . இன்றைக்கு , மாநில அரசால் லிட்டருக்கு மூன்று ரூபாயும் , மத்திய அரசால் ஐந்து ரூபாயும் குறைக்கப்பட்ட நிலையில் , பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் 85 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது . தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டில் 17 ரூபாய் 68 காசாக பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கிறது . தமிழ்நாடு அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டாலும் , கடந்த ஓராண்டில் உயர்ந்த 17 ரூபாய் 68 காசு மூலம் முன்பைவிட கூடுதல் வருவாய் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்து வருகிறது .

டீசலைப் பொறுத்த வரையில் , தி.மு.க. ஆட்சி வந்த பிறகு ஒரு காசு கூட குறைக்கப்படவில்லை . தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது . இன்றைக்கு , மத்திய அரசால் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் , டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 94 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது . அதாவது , இந்த ஓராண்டில் மட்டும் டீசல் விலை 14 ரூபாய் 29 காக உயர்ந்து இருக்கிறது . இந்த உயர்த்தப்பட்ட விலை மூலம் தமிழ்நாடு அரசுக்கு முன்பைவிட கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது . இது தவிர , பெட்ரோலியப் பொருட்களின் மூலமான வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது . தேர்தல் வாக்குறுதிப்படி , பெட்ரோல் , டீசல் விலையை குறைக்க முன் வராத தி.மு.க. அரசு , பெட்ரோல் , டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சுட்டிக்காட்டி வருகிறது .

இந்தச் சூழ்நிலையில் , துக்ளக் இதழின் 52 – வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்கள் அந்த விழாவிற்கு வருகை புரிந்த ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் , ” தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் ஒப்புக் கொண்டால் , பெட்ரோல் மற்றும் டீசலை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வரும் வகையில் , இந்தப் பொருளை ஜி .எஸ்.டி. கவுன்சிலில் சேர்க்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது , பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால் , அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்பிற்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கானஆயத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்று 24-01-2018 அன்று பேசி இருக்கிறார் . இந்தச் செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது .

இதன் தொடர்ச்சியாக , 04-04-2018 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் , பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் , பெட்ரோலியப் பொருட்களை , சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய , மாநில அரசுகளை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் , தற்போதைய முதலமைச்சருமான திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார் .

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 28-06-2018 அன்று தி.மு.க. சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது .

பெட்ரோல் , டீசல் உள்ளிட்டவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும் , மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுடைய கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல என்றும் சில மாதங்களுக்கு முன் தி.மு.க.வின் பொருளாளரும் , நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு . டி.ஆர் . பாலு அவர்கள் தெரிவித்து இருந்தார் .

இதிலிருந்து பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதில் தி.மு.க.வும் , மத்திய அரசும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது . இதன்மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைய வாய்ப்பு . உள்ளதாகவும் கூறப்படுகிறது .

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மத்திய நிதி அமைச்சருடனும் , மற்ற மாநில முதலமைச்சர்களுடனும் கலந்து பேசி , பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் , பொதுமக்களின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் . “

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *