Fri. Mar 29th, 2024

மக்கள் நீதி மய்யம் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ .1,000 – த்தை தாண்டிவிட்டது . “ எப்படி சமைப்பது எப்படி பிழைப்பது ” என்று புலம்புகின்றனர் ஏழை எளிய நடுத்தர மக்கள் .

ஏற்கனவே பார வண்டிபோல அன்றாட வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் சுமந்து செல்லும் பொதுமக்களை , இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது . காஸ் அடுப்பை பற்றவைக்கும் போதெல்லாம் மக்கள் அதன் விலையை நினைத்து வேதனை கொள்கின்றனர் .

சிலிண்டருக்கான மானியத் தொகை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மன்மோகன் சிங் அரசு அறிவித்தபோது , இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக . அன்று சிலிண்டருக்கு மாலை அணிவித்து , பாடை கட்டிப் போராடிய பாஜக – வினர்

இப்போது வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர் . தங்கள் மீதான பழியைச் சுமக்க விரும்பாத மத்திய பாஜக அரசு , பெட்ரோல் , டீசல் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடமே கொடுத்துவிட்டது . ஆனால் , முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா ? 2019 ஏப்ரல் மாதம் ஒரு சிலிண்டர் ரூ .722 – க்கு விற்கப்பட்டபோது , மானியமாக ரூ .238 வழங்கப்பட்டது . ஆனால் , இந்த மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு , தற்போது ரூ .25 கூட கிடைப்பதில்லை . அதுவும்கூட பலரது வங்கிக் கணக்கில் வந்து சேரவில்லை என்று குமுறுகின்றனர் பொதுமக்கள் .

சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று காரணம் கூறி , காய்ந்த சுள்ளிகளை வைத்து அடுப்பு எரித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கானோருக்கு இலவசமாக எரிவாயு இணைப்பை கொடுத்தவர்கள் , இப்போது சப்தமில்லாமல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறார்கள் .

ரூ .965 – க்கு விற்ற சிலிண்டர் ரூ .50 உயர்த்தப்பட்டு , தற்போது ரூ .1,015 – ஆக உயர்ந்துள்ளது . சர்வதேச சந்தை நிலவரத்தால் விலை உயர்ந்தது என்று காரணம் கூறும் பெட்ரோலிய நிறுவனங்கள் , கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏன் குறைக்கவில்லை ?

தற்போது உணவுகூட இல்லாமல் தவிக்கும் இலங்கை மக்களின் பரிதாப நிலையும் , பொருளாதார வீழ்ச்சியும் சிலிண்டர் விலை உயர்வில் இருந்துதான் தொடங்கின . அந்த நிலை இந்தியாவுக்கும் வந்துவிடக் கூடாது . உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்து , விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது .”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *