Fri. Mar 29th, 2024

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சமீபகாலமாக தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது . இந்த சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில் , அண்மையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை பட்டினம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார் . விக்னேஷின் தலை , கண் , புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாகக் கூறி போலீசார் விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர் . அதற்கு அடுத்த நாளே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் . விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அடித்துக் கொலை செய்யும் உரிமையை காவல்துறைக்கு யார் கொடுத்தது .

இதுபோன்ற உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு தேமுதிக சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் . மேலும் விசாரணைக் கைதிகளை அடித்துக் கொலை செய்யும் காவலர்கள் உண்மையிலேயே கொலை குற்றவாளிகள் தான் . அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிய வேண்டும் . அப்போதுதான் உயிரிழந்த விசாரணை கைதிகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் . மேலும் விசாரணைக் கைதிகள் மர்ம மரண வழக்குகளை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்ய வேண்டும் . காவல்துறை உங்கள் நண்பன் என கூறிவிட்டு , நண்பர்களாக இருக்க வேண்டிய காவலர்களே விசாரணைக் கைதிகளை அடித்துக் கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம் . இந்த சம்பவங்கள் மூலம் வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது . இது கடும் கண்டனத்துக்குரியது.”

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *