Thu. Apr 25th, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரமலான் திருநாள் வாழ்த்து செய்தி “புனித இரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி , ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து , அன்பு , இரக்கம் , கருணை , ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

” நீங்கள் உண்மையையே பேசுங்கள் , அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியையே தரும் “

” பசித்தவருக்கு உணவளியுங்கள் ; நோயாளிகளை நலம் விசாரியுங்கள் ; கைதிகளை விடுவியுங்கள் ” – என நபிகளார் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும் ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இசுலாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம் .

அவர்களது உற்ற தோழனாக , சிறுபான்மையினரின் காவலராக , அவர்களில் ஒருவராகவே நம் நெஞ்சில் வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விளங்கினார் . எண்ணற்ற நலத்திட்டங்களைக் கழக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக நிறைவேற்றினார் .

பயனடைய அந்தச் சாதனைகளின் பட்டியலை அணி வகுத்தாற்போல் சொல்லிட வேண்டுமென்றால் , 1969 – ல் மீலாதுன்நபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை ; உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது ; இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய் மக்கள் ” சிறுபான்மையினர் நல ஆணையம் ” துவங்கியது ; ஓய்வூதியம் பெற்று வந்த 2000 உலமாக்களின் எண்ணிக்கையை 2400 வரை உயர்த்தியது ; முதன் முறையாக வக்பு வாரியச் சொத்துகளைப் பராமரிப்பதற்கென 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது என்று சொல்லிக்கொண்டே போகலாம் .

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ” ” உருது அகாடமி ” உள்ளிட்டவற்றை தொடங்கியது , ” காயிதே மில்லத் மணிமண்டபம் ” அமைத்திட நிதி ஒதுக்கி , அடிக்கல்லும் நாட்டி கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்தது அனைத்து சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாக , 2007 – இல் இஸ்லாமியர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது என்று தலைவர் கலைஞர் அவர்களுக்கும் , இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்கவல்லது . அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசும் சிறுபான்மை மக்களின் அரணாகத் தொடர்கிறது .

முதல்முறையாக 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மாவட்டத்துக்கு ஒரு மகளிர் சங்கம் என்பதைத் தளர்த்தி , ஒன்றுக்கும் மேற்பட்ட மகளிர் உதவும் சங்கங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் ” திராவிட மாடல் ” ஆட்சி நடைபெற்று வருகிறது . இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது .

இசுலாமிய மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அளிக்கும் , அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்குத் துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் நமது அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித இரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் .”

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *