Sat. Apr 20th, 2024

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு , முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து அவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்களுக்கு , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் .

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் , “2022 – ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமென்று கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு 11-11-2021 ஆம் நாளன்று எழுதியுள்ள கடிதத்தின் மீது மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்க விழைவதாகக் குறிப்பிட்டு ஒவ்வோராண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 4,000 – க்கும் மேற்பட்டோர் .

சென்னையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர் என்றும் , தமிழ்நாடு , கேரளா , புதுச்சேரி அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் பயனடையும் வகையில் சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கும் , அங்கிருந்து திரும்பி வருவதற்கும் , 1987 ஆம் ஆண்டு முதல் 2020 – ஆம் ஆண்டு வரை நேரடி ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் . மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4,500 – க்கும் மேற்பட்டோர் தங்களது ஹஜ் புனிதப் பயணத்தினை சென்னையில் இருந்து தொடங்கினர் என்றும் , இந்தச் சூழ்நிலையில் , இந்திய ஹஜ் குழு . கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக , ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை 21 – லிருந்து 10 – ஆகக் குறைக்கப்பட்டதாகவும் , தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்களது புனிதப் பயணத்தை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தொடங்கிட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளதை மாண்புமிகு முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் .

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் . கொச்சிக்குச் சென்று பயணத்தைத் தொடங்குவதால் , 700 கி.மீ.க்கு மேல் கூடுதலாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளதோடு , பல சிரமங்களையும் , கூடுதல் செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் . தற்போது சவூதி அரேபிய அரசு பல நாடுகளிலிருந்து புனிதப் பயணமாக வருவோருக்கு கோவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள நிலையில் , ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக இஸ்லாமிய சமூகத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

எனவே தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு , 2022 ஆம் ஆண்டு , அவர்கள் சென்னையிலிருந்து தங்களது ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுமாறு மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்களை , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் .”

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *